புதன், 23 நவம்பர், 2011

இருநூற்றம்பது ரூபாயும், இரண்டு பீரும்

 

"எவ்ளோ மேடம்?"

"2000 ப்பா!"         

"இல்ல மேடம் எங்களுக்கு 1750  தானே,?!"

"ஆமாம் இந்த time ஒரு பேப்பர்க்கு  50 extra ஆகிட்டாங்க, கிளாஸ் க்கு circular வந்திருக்குமே? "
  
அவள் பேசிகொண்டிருக்க இருநூற்றம்பது ரூபாய் மேற்கொண்டு செலுத்த வேண்டும் என்ற வார்த்தை, என் கனவில் இடி விழுந்தது போலிருந்தது.
இப்போது அவனிடம் சென்று பணமில்லை இனொரு நாள் பார்துகொள்ளலாம் என்றால் என்ன சொல்வானென்று தெரியவில்லை.

அவனிடம் அப்போதே சொன்னேன் "மச்சான்! இதெல்லாம் வேண்டாண்டா, நீ வேணுனா போ, நா வரல டா!"

"மச்சி! பீர் அடிகிறதுலாம் இப்போ கூல் ட்ரிங்க்ஸ் சாப்டர மாறி ஆய்டுச்சு, சொம்மா பயமா இருக்குன்னு சீன் போடாத!"
  
கோபால் எப்பவும் இப்படித்தான், அவனிடம் தெரியாமல்  "பீர் எப்டிடா இருக்கும்" என்று  கேட்டது தவறா? இல்லை இன்று வரை பீர் குடிக்காமல் இருந்தது என் தவறா? என்று தெரியவில்லை... அவன் பேசியே என் மனதை மாற்றிவிட்டான் என்று சொல்வதைவிடவும், நான் பீர் குடிக்க அவன் பேச்சினை ஒரு காரணமாக வைத்து கொள்ள என் மனம் அறிவுத்தியது, பின்னர் ஏதானும் பிரச்னை என்றால் இது  ஒரு சிறந்த காரணமாக இருக்கும்... 

"ok  மச்சி! பீரடிக்க எவ்ளோடா செலவாகும்?"  

"சாதாரணமா டாஸ்மாக் ல அடிக்கலாம்ன உனக்கு செரிபட்டுவராது . ம்ம் எதாவது நல்ல பார் க்கு போய்டுவோம், மச்சான்! என்ன ஒரு 250  ரூபா ஆவும்டா!"

"என்னது? ஒரு பீர் 250 ரூபாவாடா?"  

" இல்லடா, ரெண்டு பீர், அப்புறம் எனக்கு யார் தருவா?"

" டேய்! நான் ஒன்னு முழுசா குடிக்கமாட்டேன்டா"

"தெரியும் மச்சி! நீ முடிஞ்சவரைக்கும் அடி மீதி இருந்தா நான் பாத்துக்குறேன்"

"நாயே! உன் கல்யாணத்துக்கு நான் அய்யர் ஆ?, சரி amount  க்கு என்ன பண்றது?"
"அதான் எக்ஸாம் வருதுல, பீஸ் ஒரு 250 ரூபா  ஏத்திட்டாங்கன்னு சொல்லி வாங்குடா, பாத்துக்கலாம்"

"டேய்! வீட்டுல எப்டிடா பொய் சொல்றது? நா சொன்னதே இல்லடா"   

"அப்டினா, பீரடிக்க போறேன்னு சொல்லி கேட்கவேண்டியதுதான?, லூசு குடிகாரன் ஆய்ட்ட அப்புறம் என்ன சொம்மா செண்டிமெண்ட்"

"டேய்! இதெலாம் செரியா வரும்னு எனக்கு தோணல"    

"அதெல்லாம் வரும் டா, சும்மா இருந்த என்ன  உசுபேத்திட்டு இப்ப ஏமாத்திடாத டா, பீஸ் கட்றோம், பீர் அடிக்கறோம், அவ்ளோதான்."  

அவன் சொன்ன மாதிரியே அம்மாவிடம் பீஸ் அதிகமாகிவிட்டது என்று பணம் கேட்டபோது, ஒரு வார்த்தை கூட கேட்காமல் தந்தாள், அப்போதே எனக்கு உண்மையை சொல்லி விடலாம் போல இருந்தது, இந்த பாழாய் போன பீர் கண்முன் ஆடியவுடன் ஒன்று சொல்லாமல் வந்து விட்டேன், இங்கு பணம் செலுத்துமிடத்தில் உண்மையிலே பீஸ் அதிகமாகிவிட்டதை அறிந்தபோது எனக்கு மயக்கமே வந்து விட்டது.நேரே சென்று கோபாலிடம் காட்டு காட்டென்று காட்டிவிட்டு வீட்டுக்கு நுழைந்தேன்.    

அம்மா இல்லை, வெளிய சென்றிருந்தவள் அபோதுதான் வந்தாள் . வந்தவள் நேரே என்னிடம் வந்து 

"இந்தா ராஜா, இந்தா 250 ரூபா" 

எனக்கு தூக்கிவாரி  போட்டது, ஒருவேளை எல்லாம் தெரிந்திருக்குமோ என்றேண்ணியவாறு


"எதுக்குமா? ஏது இந்த பணம்?"

"3000  சீட்டு போட்ருந்தண்டா, எனக்கு விழுந்துச்சு இந்த தடவ, அதுல தான் இது, காலேஜ் போற புள்ள,எதாவது செலவு இருக்கும், திடிர்னு ஒரு செலவு, இல்ல பசிக்குது, யார கேட்கமுடியும்?, அதான் வச்சிக்........."

அவள் பேசிகொண்டிருந்தாள், எனக்கு உடனே ஒரு பீர் அடித்துவிட்டு அவள் மடியில் படுத்து அழ வேண்டும் போலிருந்தது.