வியாழன், 3 செப்டம்பர், 2009

உலகின் முதல் கடவுள் பெற்றோர்தான் - நடிகர் சிவகுமார்


ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசினார்.

கோவை பேரூர் தமிழ் [^] கல்லூரியில் அருளாட்சி வெள்ளி விழா சொற்பொழிவு நிகழ்ச்சி, பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் தலைமையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் [^] சிவகுமார் கலந்து கொண்டு பேசியதாவது ...

ஒவ்வொரு மனிதனும் அடக்கத்துடன் வாழ கற்றுக் கொண்டால், மிகப் பெரிய இலக்கை எட்ட முடியும். பொறுமையை விட உயர்ந்த தவமும், கருணையை விட பெரிய அறமும் இல்லை.

மனிதர்களிடையே கருப்பு, வெள்ளை என வண்ணங்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஒற்றுமை என்ற எண்ணத்தில் வேறுபாடு இருக்கக் கூடாது.

ஒவ்வொரு மனிதனிடமும், அன்பு, கல்வி [^], நீதி, உயர்ந்த பண்பு போன்ற பழக்கங்கள் இருந்தால் சான்றோர்களால் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படுவர்.

இரண்டாம் உலகப்போரில் கோடிக்கணக்கான மக்கள் [^] கொல்லப்பட்டதற்கு காரணம், மனிதநேயமின்றி அரக்கத்தனத்துடன் நடந்த நிகழ்ச்சி என்று கூறலாம் .

இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் தலைதூக்காமல் இருக்க, சமுதாயத்தில் ஒற்றுமையும், மனிதநேயமும், மத நல்லிணக்கமும் அவசியம்.

அன்றைய காலத்தில் கஷ்டப்பட்டு பணம் செலவழித்து, சொத்துக்களை விற்று, வெளிநாட்டிற்கு சென்று படித்து விட்டு நம் நாட்டில் சேவை செய்தனர்.

ஆனால், தற்போது அரசு உதவித்தொகை, சலுகைகளை பயன்படுத்தி படித்து விட்டு, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதை கவுரமாக நினைக்கின்றனர்.

நம்மை கேட்காமல் படைத்த கடவுள், நமக்கு தேவையானவற்றை உரிய நேரத்தில் நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையில் கடமையை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும், உலகின் முதல் கடவுள் பெற்றோர்கள் தான் என்பதை புரிந்து, பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.


கருத்துகள் இல்லை: